சேலம் : தேமுதிகவினர் சாலை மறியல்

         சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுகவினர் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய தேமுதிக பெண் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அக்கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கெங்கவல்லி தேமுதி எம்எல்ஏ சுபாவுக்கு பேச வாய்ப்பு தருவது தொடர்பாக இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் பேசிய பின்னர் எம்எல்ஏ.,வுக்கு பேச வாய்ப்பு தருவது மரபு இல்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை எதிர்த்து சுபாவும் அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பினர். அப்போது அவரை அதிமுகவினர் அவதூறாக பேசியதாக கூறி திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்பு, சுபா தலைவாசல் காவல் நிலையத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் தெரிவித்தார். அவரது தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்